மீண்டும் பணி நீக்கம்.. மெட்டா நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை.. கண்ணீரில் மூழ்கிய ஊழியர்கள்!

 

உலகின் முன்னணி டெக் மற்றும் சமுக வலைத்தள நிறுவனமான மெட்டா நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி - நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் வளர்ந்த நாடுகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான மெட்டா தன்னுடைய 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்க அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் மெட்டா நிறுவனத்திலிருந்து 11 ஆயிரம் பணியாளர்கள் நீக்கப்பட்டார்கள். மேலும் 10,000 பேர் மார்ச் மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். புகழ்பெற்ற பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவானது, சமீபத்தில் மேலும் 4,000 பேரை நிறுவனத்திலிருந்து நீக்கி உள்ளது. 

இது மட்டுமல்லாமல் இந்த மே மாதத்தில் மேலும் 6,000 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்குறைப்பிற்கான அடுத்த கட்ட நடவடிக்கை அடுத்த வாரம் முதல் துவங்க உள்ளது. இது கண்டிப்பாக டெக் துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கும். குறிப்பாக என்னுடைய நிறுவனத்தையும் பாதிக்கும் என நிறுவனத்தின் உயரதிகாரியான Nick Clegg தெரிவித்துள்ளார்.

இது கண்டிப்பாக மிகப் பெரும் அளவில் கவலைகளையும் அதே சமயத்தில் நிச்சயமற்ற தன்மையையும் உணர்த்துகிறது. இதை மிகவும் எளிய வழியிலும் ஆறுதலளிக்கும் வகையிலும் செய்து முடிக்க நான் விரும்புகிறேன். இந்த நிச்சயமற்ற தன்மையை பணியாளர்கள் பொருட்படுத்தாமல் தங்களது தொழிலை மிகவும் சிரத்தையுடன் செய்து வருவது அவர்கள் மீது உள்ள அபிமானத்தை இன்னும் எனக்கு அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, இப்போது இந்தியாவில் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவர்களும் உள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் அவினாஷ் பந்த் மற்றும் 'மீடியா பார்ட்னர்ஷிப்' பிரிவின் இயக்குனரும், தலைவருமான சாகேத் ஜா சவுரப் ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த இருவரும், மெட்டாவின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக நீக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.