டிரம்ப் பதிவுகளை வழங்க தாமதம்.. ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ. 2.89 கோடி அபராதம் விதித்த அமெரிக்கா!

 

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியதால் அமெரிக்க நீதிமன்றம் ட்விட்டருக்கு அபராதம் விதித்துள்ளது.

2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, முன்னாள் அதிபர் டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்க கோரி அந்நிறுவனத்துக்கு கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிவடைந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்னும் முழுமையான தகவல்களை அந்நிறுவனம் வழங்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தகவல்களை முழுமையாக தருவதில் தாமதம் ஏற்படுத்தியது, நீதிமன்ற உத்தரவை அவமதித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ட்விட்டர் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதன்படி, ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.3.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.2.89 கோடியாகும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.