பேஸ்பால் விளையாடிய சிறுவனுக்கு மாரடைப்பு.. உடனடியாக உயிரைக் காப்பாற்றிய தாய்!

 

அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டில் அடிபட்ட 6 வயது மகனை தாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் லேக் வொர்த் பகுதியைச் சேர்ந்தவர் ஆஸ்கார் ஸ்டூப். 6 வயது சிறுவனான இவர், பேஸ்பால் விளையாட்டில் தனது சகோதரனின் சிறிய லீக் அணிக்காக விளையாடினார். அவருக்கு விளையாட்டின்போது பந்தை பிடிக்கும் முயற்சியில் மார்பில் அடிபட்டது. இதில் சிறுவன் ஆஸ்காருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை கவனித்த சிறுவனின் தாயார் சாரா பதறியடித்து மைதானத்திற்குள் ஓடினார். தந்தை ரிலேவும் உள்ளே சென்றார். சமயோசிதமாக சிந்தித்த சிறுவனின் தாய், மற்றொரு பெற்றோருடன் சேர்ந்து ஆஸ்காருக்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்தார். துணை மருத்துவர்கள் வரும்வரை சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. 

அதன் பின்னர் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் காப்பாற்றப்பட்டார். சில நாட்கள் உடல் சிகிச்சைக்குப் பிறகு, சிறுவன் ஆஸ்கார் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

இச்சம்பவம் குறித்து இணையத்தில் எழுதிய தாய் சாரா, “ஆரம்பத்தில் அவனை காற்று தட்டியது போல் தோன்றியது. ஆனால், சில நொடிகளில் ரிலே மற்றும் மைதானத்தில் உள்ள மற்ற பயிற்சியாளர்கள் இது மிகவும் தீவிரமானதாக உணர்ந்தனர். ரிலே என் பெயரைக் கத்திய விதத்தை என்னால் மறக்கவே முடியாது” என குறிப்பிட்டார்.

A post shared by Sarah Stuebe (@sarahstuebe)

மேலும் சிகிச்சைக்கு பின் கண்விழித்து ஹாய் மாம் என்று ஆஸ்கார் கூறியதாகவும், தூக்கம் தான் சிறந்த மருந்தாக அவருக்கு இருந்ததாகவும் சாரா தெரிவித்தார். அனைத்து பெற்றோர்களும் சிபிஆர் பயிற்சி பெற வேண்டும் என்றும், அப்போது தான் இதுபோன்ற தருணங்களில் தயாராக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.