தாய்லாந்தில் படகில் தீ.. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.. வைரல் வீடியோ

 

தாய்லாந்தில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் பிரபல கடற்கரை சுற்றுலா தலமாக கோ தாவோ உள்ளது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். அந்த வகையில் சூரத் தானி மாகாணத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கோ தாவோவுக்கு ஒரு படகில் சென்றனர்.

அப்போது அவர்கள் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது. இதனால் பயத்தில் அவர்கள் படகில் இருந்து கடலுக்குள் குதித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த கடலோர போலீசார் கடலில் தத்தளித்து கொண்டு இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி சுற்றுலா பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு வேறு சில படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். இதன்மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.