33 வயதில் இரண்டு முறை மாரடைப்பு.. பிட்னஸ் பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!!

 

பிரேசிலை சேர்ந்த 33 வயது பிட்னஸ் இன்புளூயன்சரான இளம் பெண் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் மீடியா பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அவர்களின் திறமையை காட்ட டிஜிட்டல் ஒரு நல்ல தளமாக உள்ளது. பெரிய அளவில் செலவில்லாமல் ஒருவரின் திறமையை வெளிப்படுத்த சமூக வலைத்தளங்கள் பயன்படுகிறது. சமூக வலைத்தளங்களை பலர் பொழுதுபோக்காக பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். மற்றவர்களை என்டேர்டைன் செய்ய வேண்டும் என்ற வகையில் சிலர் சமூக வலைத்தளங்களை அவர்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

அதில் ஒரு சிலரின் வீடியோக்கள் வைரலாகும்போது, அவர்கள் பிரபலம் அடைகிறார்கள். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒவ்வொரு போஸ்டையும் பார்த்து தங்களது கருத்துகளை வெளியிடுவார்கள். ஆன்மிகம், மருத்துவம், அழகு குறிப்பு, பிட்னஸ் என எல்லா துறைகளிலும் இதுபோன்று வீடியோக்கள் வெளியிடுபவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் (Influencer) என அழைக்கப்படுவார்கள்.

அந்த வகையில் பிட்னஸ், பேஷன், டிராவல் குறித்த தகவலை வெளியிட்டு பெண் இன்புளூயன்சராக திகழ்ந்தவர் பிரேசில் நாட்டின் லரிசா போர்கேஸ் (33). இவரை சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இளம் வயதில் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, அவரது குடும்பம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் பதிவிட்டதில், “33 வயது நிரம்பிய, மிகவும் அன்பான ஒருவரை இழந்த வலி மிகுந்தது. எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன. அவர் இல்லாத எங்களின் ஏக்கம் விவரிக்க முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கிராமடோ செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 20-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றதாகும், 2-வது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மரணத்திற்கான உண்மையான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், முதல் மாரடைப்பு ஏற்பட்டபோது மது அருந்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.