அமெரிக்காவில் மகனை காப்பாற்ற சென்ற இந்திய தந்தை பலி.. பீச்சில் குளிக்க சென்று போது சோகம்!

 

அமெரிக்காவில் பீச்சில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்திய தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டத்தை சேர்ந்தவர் பொட்டி வெங்கட ராஜேஷ் குமார் (44). இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சென்று உள்ளார். அதன் பின்னர், கடந்த மே மாதத்தில் அவரது மனைவி, குழந்தைகள் அமெரிக்காவுக்கு சென்று உள்ளனர். அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் வேலை செய்து வந்து உள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா முழுவதும் நேற்று (ஜூலை 4) சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ஜாக்சன்வில்லே பீச்சுக்கு அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோருடன் ராஜேஷ் சென்று உள்ளார். அப்போது, அவரது மகன் கடலின் உள்ளே சென்று உள்ளார். அவர், கடலின் நீரோட்டத்தில் சிக்கி கொண்டார்.

இதனை கவனித்த ராஜேஷ் மகனை காப்பாற்ற சென்று உள்ளார். எனினும், இரண்டு பேரும் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டனர். அருகே இருந்தவர்கள் உடனடியாக அவர்களை காப்பாற்ற ஓடி சென்றனர். ஆனால், சுயநினைவற்ற நிலையில் ராஜேஷ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்து உள்ளனர். ராஜேஷின் 12 வயது மகன் மீட்கப்பட்டு ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது மகனின் நிலைமை சீரடைந்து உள்ளது. இதனை ராஜேஷின் சகோதரர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.