பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட அமெரிக்க முதியவர் மரணம்.. 40 நாட்களில் நேர்ந்த சோகம்!

 

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தப்பட்ட நபர் ஒருவர் 40 நாள்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் ஃபாசெட் (58). முன்னாள் கடற்படை வீரரான இவர் இதய செயலிழப்பால் பாதிகப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த மாதம் 20-ம் தேதி மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம் பொருத்தப்பட்டது. மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட முதல் மாதத்தில் அவரது இதயம் ஆரோக்கியமாக இருந்தது. 

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாகச் செயலிழக்கத் தொடங்கியது. இதனால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் வாழ்ந்து இருக்கிறார். திங்கட்கிழமை அவரது உயிர் பிரிந்தது. அவரது மனைவி ஆன், தனது கணவருக்கு வெற்றிகரமாக பன்றி இதயம் பொறுத்தப்பட்டது பற்றிக் கூறும்போது, “அவர் உயிர் பிழைத்து வருவார் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்றார்.

“அனைவரும் எங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மனித உறுப்பு கிடைக்காதபோது மாற்று இதயத்திற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவருடைய கடைசி ஆசை” என்று இதய மாற்று அறுவை சிகிச்சையின் இயக்குநர் டாக்டர் பார்ட்லி கிரிஃபித் கூறினார். 

விலங்கு உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றுவது, ஜீனோட்ரான்ஸ்பிளான்டேஷன் என்று அழைக்கப்படுகிறது. மனித உறுப்பு தான பற்றாக்குறைக்கு காரணமாக ஏற்படும் நீண்டகால காத்திருப்புக்கு இது ஒரு தீர்வாக உள்ளது. இருப்பினும், இதற்கான நடைமுறைகள் சவாலானவை என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரி 7, 2022 அன்று இதே மேரிலாண்ட் மருத்துவமனை மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து எடுக்கப்பட்ட இதயத்தை 57 வயதான டேவிட் பென்னட் என்பவருக்குப் பொருத்தியது. அப்போதுதான் முதல் முறையாக மனிதருக்கு வேறு உயிரினத்தின் இதயம் பொருத்தப்பட்டது. அவரும் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பின்பும் இரண்டு மாதங்களில் உயிரிழந்தார். மார்ச் 8, 2022 அன்று மரணம் அடைந்தார்.