மீண்டும் முதலிருந்து ஆரம்பம்.. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த கொரோனா வைரஸ்.. உச்சக்கட்ட எச்சரிக்கை!

 

இந்தோனேசியாவில் சுமார் 113 தனிப்பட்ட மாற்றங்களை கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் நீடித்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69.03 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் இருந்து உலகம் தற்போது மீண்டுள்ள நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளது.

அந்த நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதித்தபோது, அந்த வைரஸ் சுமார் 113 தனிப்பட்ட மாற்றங்களை கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதில் சுமார் 37 வகை மாறுதல்கள், மனிதனின் உடலில் உள்ள செல்களின் புரத சத்தை அழிக்கவல்லது என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு நம்மை பயமுறுத்திய ஓமிக்கிரான் வகை கொரோனா வைரஸ் வெறும் 50 வகை தனிப்பட்ட மாற்றங்களை மட்டுமே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கண்டறியப்பட்ட மிகவும் தனித்துவனமான வைரஸ் தொற்றாக இது இருக்கின்றது என்றும், ஆனால் அது அதிக ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இது பரவினாலும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என உயர்மட்ட வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் இத்தகைய நோய்த்தொற்றுகள், எய்ட்ஸ் அல்லது புற்றுநோய் கீமோதெரபிக்கு உட்பட்டவர்கள் போன்ற குறைந்த நோயெதிர்ப்பு உடல் அமைப்புகளைக் கொண்ட நபர்களை அடிக்கடி பாதிக்கின்றன, இதனால் அவர்களால் அந்த வைரஸை திறம்பட எதிர்த்துப் போராட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நீண்டகால நோய்த்தொற்றுகள், விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை வைரஸ் மாற்றங்களை ஊக்குவிக்கும் நிலைமைகளை உருவாக்குகின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.