திடீரென வெடித்து சிதறிய எரிமலை.. 11 வீரர்கள் பலி.. இந்தோனேசியாவில் பயங்கரம்!

 

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘பசிபிக் ரிங் ஆஃப் பயர்’ என்று அழைக்கப்படும் இடத்தில் தீவு நாடான இந்தோனேசியா அமைந்துள்ளது. இந்த தீவில் சிறியதும் பெரியதுமான சுமார் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. இந்த நிலையில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது.

நாலாபுறமும் நெருப்புக் குழம்புகள் சிதறின. விண்ணை முட்டும் அளவுக்கு சாம்பல் படர்ந்தது. இதனால் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள், அவசரம் அவசரமாக திரும்பினர். மொத்தம் 75 மலையேற்ற வீரர்கள் அங்கு சென்றிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

அவர்களில் 49 பேர் கீழே இறங்கிவிட்டனர். அவர்களில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு இருப்பதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் சடலமாக கண்டறியப்பட்டனர். 3 பேர் மட்டுமே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.