நேபாளத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.. பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு!

 

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீப காலங்களாகவே இயற்கை பேரிடர்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்தே வருகிறது. வரலாறு காணாத வெயில், திடீரென கொட்டும் மழை, நிலநடுக்கம் என இயற்கை பேரிடர்கள் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

அந்த வகையில் நேற்று நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தில், ருகும் மேற்கு பகுதியில் 36 பேர் உயிரிழந்தனர். இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது. ஜஜர்கோட் பகுதியில் 34 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த சிலர் சுர்கெத் பகுதிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.


நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தி உள்ளார். அவர் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளை பார்வையிட புறப்பட்டு சென்றுள்ளார். இதுவரை நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வடைந்து உள்ளது.  

இந்த நிலநடுக்கம், டெல்லி என்.சி.ஆர்., உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வடஇந்திய பகுதிகளிலும் உணரப்பட்டது.