மன அழுத்தம் குறைக்கும் வித்தியாசமான முறை.. ஆஃபீஸ் மேஜையிலேயே வாழை வளர்க்கும் சீனர்கள்!

 

சீனாவில் அலுவலகத்தில் மனஅழுத்தத்தை குறைக்க ஊழியர்கள் ஜாடியில் வாழைப்பழம் வளர்ப்பதை டிரெண்டாகி வருகின்றனர்.

பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தம் ஊழியர்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை எதிர்கொள்ள ஊழியர்கள் ஏராளமான பழக்க வழக்கங்களை கையாண்டு வருவது இயல்பாகிவிட்டது. ஒவ்வொரு நாட்டிலும், அவரவர் சூழலுக்கு ஏற்ப மன அழுத்தம் போக செய்ய பல யுத்திகளை பணியாளர்கள் கையாண்டு வருகின்றனர். எனினும், உலகளவில் பணிச்சுமை அல்லது லேசான மன அழுத்தம் ஏற்படும் போது, பணியில் இருந்து சிறு ஓய்வுக்காக பலர் டீ, காஃபி உள்ளிட்டவைகளை பருகுவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் இவற்றுடன் நொறுக்குத்தீனிகளை எடுத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில், நவீன சமூக வலைதள காலக்கட்டத்தில் எதையும் வித்தியாசமாக செய்தே பழகி போன சீனர்கள் மன அழுத்தத்தை போக்கவும் தங்களுக்கே உரிய பாணியில் புதிய முறையை கையாள துவங்கியுள்ளனர். அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஃபிட்ஜெட் ஸ்பின்னர், மெடிடேஷன் ஆப் உள்ளிட்டவைகளை கடந்து சீனர்கள் தற்போது வாழை சாகுபடியில் இறங்கியுள்ளனர்.

மேலும், இவ்வாறு செய்வது அந்நாட்டில் டிரெண்டாகி வருகிறது. இந்த டிரெண்ட்-இன் படி பணியாளர்கள் தங்களது அலுவலகத்தில் அவரவர் பணியாற்றும் மேஜையில், வாழை செடி ஒன்றை வாங்கி வந்து வளர்க்கினர். வழக்கமான வாழை சாகுபடி போன்றில்லாமல், இவர்கள் பச்சை நிறத்தில் உள்ள வாழை தார் ஒன்றை நீர் ஊற்றும் வசதி கொண்ட தொட்டியில் வைக்கின்றனர். 

பிறகு, ஒருவார காலத்திற்கு அவ்வப்போது பராமரிக்கும் போது, பச்சை நிற தாரில் இருந்து வாழை ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது. முதலில் பச்சை நிறத்தில் துவங்கி இறுதியில் இளம் மஞ்சள் நிறத்திற்கு வாழை பழமாக மாறுகிறது. இந்த வழிமுறைகளை பார்க்கும் போது ஒவ்வொரு தருணமும் அளவில்லா மகிழ்ச்சியையும், சுவாரஸ்யத்தையும் அளிப்பதாக டிரெண்ட்-இல் பங்கேற்றவர்கள் ஆன்லைனில் தெரிவிக்கின்றனர். 

இந்த வழக்கம் சீனாவின் இன்ஸ்டாகிராம் போன்ற தளமாக செயல்பட்டு வரும் ஷாங்ஷூவில் வைரலாகி உள்ளது. இது தொடர்பான பதிவுகள் அதிக லைக்குகளை வாரி குவிக்கின்றன. அந்த வகையில், மன அழுத்தம் கொண்டவர்களுக்கு நிம்மதியையும், சமூக வலைதளத்தில் லைக்குகளை குவிக்கவும் இந்த டிரெண்ட் தற்போது உதவுகிறது.