4 வயது சகோதரியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 3 வயது சிறுமி... அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!!

 

அமெரிக்காவில் தனது 4 வயது சகோதரியை 3 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். 

இந்த நிலையில் உறவினர்களுடன் அமர்ந்து பெற்றோர் பேசிக்கொண்டிருந்த போது 2 குழந்தைகளும் வேறொரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த 3 வயது பெண் குழந்தை வீட்டில் கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில் திடீரென துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்தது. இந்த சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அங்கு அவர்களது 4 வயது பெண் குழந்தை குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்செயலாக நடந்ததாகத் சொல்லப்படுகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏதேனும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.