பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயது சிறுவன்.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு

 

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூடத்தில் சிறுவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடக்கு பெர்த்தில் டூ ராக்ஸ் பகுதியில் உள்ள அட்லாண்டிஸ் பீச் பாப்டிஸ்ட் பள்ளிக்கூடம் மற்றும் அதன் கார் பார்க்கிங் பகுதியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த கார்கள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்தன. 

இதையடுத்து பள்ளி நிர்வாகம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். 
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 15 வயது சிறுவன் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதும், அவன் இந்த பள்ளியின் முன்னாள் மாணவன் என்பதும் தெரிய வந்தது. எனவே சிறுவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்த 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் சிறுவன் எதற்காக பள்ளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான் என்றும் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.