தன் மீது தமிழ்நாடு அரசு கடன்... சேமிப்பு பணத்தை கொடுத்த திருச்சி நபர்!

 

தமிழக அரசு வாங்கிய கடனை அடைக்க, சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தன் பங்காக, 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம், துறையூர் கொப்பம்பட்டி கிழக்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் சவுதி அரேபியா ஜிந்தாவில் வசிக்கிறார். அங்கு அவர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். இவர் 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார்.

அத்துடன், அவர் அங்கிருந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் சவுதி அரேபியாவில் பொறியாளராக பணிபுரிகிறேன். பொருளாதாரம் படிக்கிறேன். தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை செய்தி வழியே பார்த்தேன். அதில், 2023 மார்ச் 31 நிலவரப்படி, தமிழக அரசின் கடன் 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடி. அடுத்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, ஒவ்வொரு தமிழனின் மீதும் உள்ள தமிழக அரசின் கடன், 90 ஆயிரத்து 558 ரூபாய். இதை அறிந்து வருத்தம் அடைந்தேன். கடன் தீர என் பங்களிப்பை செலுத்த முடிவு செய்தேன்.

அதற்காக கடந்த ஆறு மாதத்தில், 90 ஆயிரத்து 558 ரூபாய் சேமித்து, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன். தமிழக அரசின் கடனை செலுத்த என் பங்களிப்பை பயன்படுத்தவும். தமிழகம் ஒரு குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.