வலிப்பு நோயால் கீழே விழுந்த தாய்... ஆம்புலன்சை அழைத்து காப்பாற்றிய சிறுவன்.!!

 

வலிப்பு நோயால் கீழே விழுந்த தனது தாயை ஆம்புலன்சை அழைத்து சிறுவன் ஒருவன் காப்பாற்றிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாண்டி காக்கர் என்ற 4 வயது சிறுவன் வலிப்பு நோயால் கீழே விழுந்து பாதிப்புக்குள்ளான தனது தாயை ஆம்புலன்சை அழைத்து காப்பாற்றி இருப்பது அங்கு அவனுக்கு பாராட்டை பெற்றுத்தந்துள்ளது.

சம்பவத்தன்று மாண்டி காக்கரின் தாய் வலிப்பு நோயால் கீழே விழுந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்த சிறுவன் உடனடியாக தேசிய நெருக்கடி கால எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்சை வரவழைத்தான். அதன்பேரில் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அந்த ஆம்புலன்சில் இருந்த மருத்துவர், மருத்துவ பணியாளர்கள் அந்த பெண்ணுக்கு தகுந்த சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர்.

இந்த சம்பவம் டாஸ்மேனியாவின் டான்சஸ்டன் நகரில் நடந்து உள்ளது. சம்பவத்துக்கு முந்தைய நாள்தான் அந்த பெண், தன் மகனுக்கு நெருக்கடியான காலத்தில் தேசிய நெருக்கடி கால எண்ணை தொடர்பு கொள்வது எப்படி என்பதை விளக்கமாக கற்றுத்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சிறுவனின் புத்திசாலித்தனத்தை பாராட்டி தேசிய நெருக்கடி கால சேவை அமைப்பினர் நேற்று பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.