அமெரிக்க அதிபர் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு! விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜோ பைடன் உறுதி!!

 

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து இரண்டு தொகுப்புகளாக அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும். அரசின் மிக முக்கிய மற்றும் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ராபர்ட் ஹுர் தலைமையில் விசாரணைக்கு அமைத்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இதே போல் புளோரிடாவில் உள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் வீட்டில் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து அப்போது பேசிய ஜோ பைடன், இது மிகவும் பொறுப்பற்ற செயல் என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜோ பைடனின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், தான் ரகசிய ஆவணங்களை முக்கியமாக கருதி பாதுகாப்பேன் என்பது மக்களுக்கு தெரியும் என்றும், இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என்றும் தெரிவித்தார்.