ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்ற டென்மார்க் ராணிக்கு கொரோனா உறுதி!!

 

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்ற டென்மார்க் ராணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கடந்த 8-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் 8-ம் தேதி உயிரிழந்தார்.

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு கடந்த 19-ந் தேதி லண்டனில் நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெட் (82) நேரில் கலந்து கொண்டு, ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது. 50 ஆண்டு காலம் ராணியாக உள்ள அவர் நேற்று முன்தினம் இரவு முதல் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். ஏற்கனவே அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தாக்கி மீண்டு வந்தார். அவர் 3 'டோஸ்' தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ள நிலையில் இப்போது கொரோனா தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.