ரூ.247 கோடி மதிப்பு நகைகள் திருட்டு... துப்பு கொடுத்தால் ரூ.57 கோடி சன்மானம்.. கோடீஸ்வரர் மகளின் அறிவிப்பு

 

இங்கிலாந்தை சேர்ந்த பெண்ணின் வீட்டில் இருந்து திருடுபோன நகைகள் குறித்து துப்பு கொடுப்போருக்கு ரூ.57 கோடி சன்மானம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா ஒன் கார் பந்தைய போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் பெர்னி எக்லெஸ்டோன். இவரது மகள் தமரா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது கணவர், மகளுடன் லண்டனில் இருந்து பின்லாந்துக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். அதேநேரத்தில் அவரது லண்டன் வீட்டில் மிகப்பெரிய திருட்டு நடந்துள்ளதன.

வீட்டின் ஒவ்வொரு அறையையும் சூறையாடிய கொள்ளையர்கள், விலை உயர்ந்த நகைகள், கடிகாரங்கள் உள்ளிட்ட பல பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.247 கோடி எனக் கூறப்படுகிறது. திருட்டு நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த தமரா, ‛தனது நகைகளை சட்டப்படி மீட்க நீண்ட நாட்கள் காத்திருந்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை’ எனக் கூறி புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்த துப்பு கொடுப்போருக்கு நகைகள் மீட்கப்பட்டால், மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பில் 25 சதவீதம் அல்லது ரூ.57 கோடியை சன்மானமாக வழங்க தயாராக உள்ளதாக தமாரா அறிவித்துள்ளார்.

இந்த மிகப்பெரிய திருட்டு சம்பவத்தில் இதுவரை ஒரே ஒரு ஜோடி தோடு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.