இலங்கையில் அவசரநிலை ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு

 

இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை வரும் ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

இதனையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமிசிங்கே பொறுப்பேற்றார். ஆனால், அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொது சொத்துகள் பாதுகாப்பு, பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை ரணில் விக்கிரமசிங் கடந்த 19-ம் தேதி அறிவித்தார்.

அதன் பின் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன்பு, ரணில் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமலில் உள்ள அவசரநிலை வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.