எகிப்தின் மர்ம பெண்... மம்மியாக பதப்படுத்தப்பட்ட பெண்ணின் முக வடிவத்தை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்!!

 

பல நூறு ஆண்டுகளுக்கு முன் இறந்து மம்மியாக பதப்படுத்தப்பட்ட மர்ம பெண்ணின் முக வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டுள்ளனர்.

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் முக்கியமானது எகிப்து. உலக அளவில் மிகவும் பழமையான நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். இங்கு இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களது உடல்களை பதப்படுத்தி வைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே எகிப்தின் பிரமிடுகள் பிரபலமானது.

இந்த நிலையில்தான் எகிப்தில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட மம்மிகள் பல்வேறு ஆச்சரிய தகவல்களை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அளித்து வருகின்றன. அந்த வகையில் எகிப்தின் மர்ம பெண் என்று அறியப்பட்டு வந்த மம்மி ஒன்றின் முக வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
பல நூறு வருடங்களுக்கு முன் எகிப்து நாட்டைச் சேர்ந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் 7 மாதம் கர்ப்பமாக இருக்கும்போது உயிரிழந்து உள்ளார். இந்த நிலையில், அவரது உடலை மம்மியாக பதப்படுத்தி வைத்துள்ளனர். அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் எல்லாம் எடுக்கப்பட்டு, சிசுவை மட்டும் அவரது உடலின் வலது பக்கத்தில் வைத்து பதப்படுத்தியுள்ளனர். இப்பெண் எப்படி இறந்தார் என்ற தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அவரது பதப்படுத்தப்பட்ட உடலைக் கைப்பற்றிய ஆராய்ச்சியாளர்கள், அப்பெண்ணின் முக வடிவத்தை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டுள்ளனர். இந்த முக வடிவத்தை 2டி - 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.