சிறைச்சாலையில் கோஷ்டி மோதல்.. 10 பேர் பலி!! ஈகுவேடாரில் பயங்கரம்!!

 

ஈகுவேடார் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் கடந்த சில மாதங்களாக சிறைச்சாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல்களே பெரும் கலவரமாக உருவெடுத்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 

இது போன்ற மோதல்களை தடுக்க சிறைச்சலைகளில் குழுத் தலைவர்களாக வலம் வரும் நபர்களை வேறு சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஈகுவேடார் தலைநகர் குவிட்டோவில் உள்ள இன்கா சிறைச்சாலையில் இருந்து 3 முக்கிய கேங் லீடர்களை வேறு சிறைக்கு மாற்றும் பணி நடைபெற்றது. 

அப்போது கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு, கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குவிட்டோ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, நவம்பர் 1-ம் தேதி கைதிகள் சிறை மாற்றத்தின் போது கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த சிறையில் கடந்த ஆண்டு முதல் இதுவரை 400 கைதிகள் இறந்துள்ளனர்.