ஆஸ்திரேலியாவில் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து; இந்திய மாணவர் பலி!!

 

ஆஸ்திரேலியாவில் பணி முடிந்து வீடு திரும்பிய இந்திய மாணவர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குணால் சோப்ரா (21), ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வந்தார். இவர் படித்து கொண்டே வேலைக்கும் சென்று வந்துள்ளார். வழக்கம் போல் பணி முடிந்து கேன்பெர்ரா அருகே காரில் அவர் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தபோது, லாரி ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே குணால் சோப்ரா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தவறான பாதையில் சென்று விபத்து ஏற்படுத்தி உள்ளார். இந்த விபத்து பற்றி சாலை பாதுகாப்பு போலீஸ் அதிகாரி டிராவிஸ் மில்ஸ் கூறுகையில், சோப்ராவின் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவர் விசாவில் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். கேன்பெர்ரா நகரில் இந்த வருடத்தில் நடந்த முதல் விபத்து என தகவல் தெரிவிக்கின்றது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவரது மறைவு செய்தியை, ஆஸ்திரேலியாவில் உள்ள எஸ்.பி.எஸ். பஞ்சாபி என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வம்சாவளியான 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இந்த சோக சம்பவம் நடந்து உள்ளது.