வழக்கு போடுறீங்களா..? ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த எலான் மஸ்க்!!

 

ட்விட்டர் நிறுவனம் எலான் மீது வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அந்நிறுவனத்தின் மீது எலான் எதிர்வழக்கு தொடுத்திருப்பது உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம்  செய்தார்.

இந்த நிலையில் ட்விட்டரில் 20 முதல் 50 சதவீதம் வரை போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த  கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால், 5 சதவீதத்திற்கு குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்தார். இதனால் முன்னர் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையே, ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி ட்விட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், போலி கணக்குகளின் விபரங்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடாததால் அந்நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்தார். போலி கணக்குகள் கேட்ட தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

இதனால், கோபமடைந்த ட்விட்டர் நிறுவனம், எலான் மஸ்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 17-ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு வெளிவந்த சில மணிநேரங்களில் ட்விட்டர் நிறுவனத்தின் மீது எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதுதொடர்பாக 164 பக்க ஆவணம் நீதிமன்றத்தில் எலான் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை என்றாலும், விரைவில் நீதிமன்ற திருத்தங்களுடன் இந்த ஆவணம் வெளியிடப்படும் என தெரிகிறது.