அமெரிக்காவில் காதலனை சூட்கேசில் பூட்டி கொன்ற காதலி.. 2 ஆண்டுகள் பின் வெளியான அதிர்ச்சி தகவல்

 

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் காதலனை சூட்கேசிஸ் அடைத்து வைத்து கொன்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வின்டர் பார்க் பகுதியில் வசித்து வருபவர் சாரா. இவரது காதலன் ஜார்ஜ் டோரஸ். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாரா தனது வீட்டில் காதலன் ஜார்ஜ் உடன் மது அருந்தியுள்ளார். அதன்பின்னர் இருவரும் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடியுள்ளனர். அப்போது காதலனை சாரா ஒரு பெட்டியில் வைத்து அடைத்துள்ளார்.

காதலன் ஜார்ஜ் பெட்டியில் இருந்து வெளிவந்துவிடுவார் என்று நினைத்து  சாரா உறங்க சென்றுவிட்டார். காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டில் ஆள் இல்லாததால் கீழ்தளத்தில் இருப்பார் என்று நினைத்துள்ளார். ஆனால் எங்கும் காணாததால் சூட்கேசை திறந்து பார்த்துள்ளார். அப்போது ஜார்ஜ் டோரஸ் பெட்டிக்குள் மூச்சற்று கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாரா அவசர உதவியை அழைத்துள்ளார். மூச்சு விட முடியாமல் பெட்டிக்குள்ளேயே ஜார்ஜ் இறந்து விட்டது தெரியவந்துள்ளது. முந்தைய இரவு கண்ணாமூச்சி விளையாடியதாகவும் அப்போது சூட்கேசில் ஒளிந்து கொண்டு இறந்ததாகவும் வழக்கு பதியப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் சாரா, தனது காதலன்  ஜார்ஜ் டோரஸை பெட்டிக்குள் வைத்து அடைப்பதும். மூச்சு விட சிரமமாக இருக்கிறது என்று ஜார்ஜ் கதறுவதும் பதிவாகியுள்ளது. அதற்கு சாரா ‘நீ செய்த செயல்களுக்கு இது தேவை தான். நீ என்னை ஏமாற்றும் போது எனக்கும் இப்படி தான் இருந்தது. நன்றாக அனுபவி’ என்று சொல்லிவிட்டு தூங்க சென்றுள்ளார்.

இதையடுத்து சாரா வேண்டுமென்றே தனது காதலனை பெட்டிக்குள் அடைத்து கொன்றதற்காக வழக்கு தொடரப்பட்டு முதற்கட்ட விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.