சாக்லெட்டை பெட்டியில் போட்டு மறைத்து வைத்த 8 வயது சிறுமி.. 88 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த மகள்!

 

இங்கிலாந்தில் பெட்டில் போட்டு மறைத்து வைக்கப்பட்ட சாக்லெட்டை சுமார் 88 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள லீட்ஸ் பகுதியில் வசிக்கும், வேறா பெட்செல் என்ற சிறுமிக்கு 1935-ம் ஆண்டு அவரின் தந்தை பரிசாக ஒரு சாக்லேட் அளித்துள்ளார். அப்போது 8 வயதான இவருக்கு அவரது தந்தையினால் அளிக்கப்பட்ட இந்த பரிசு அவருக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகும். ஏனெனில் அந்த சாக்லேட், ராஜா 5-ம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரியின் வெள்ளி விழாவின் போது அளிக்கப்பட்ட சாக்லேட் ஆகும். இதன் காரணமாகவே தனது தந்தை தனக்கு இந்த சாக்லேட்டை பரிசாக அளித்த போது, அதனை சாப்பிடாமல் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்க முடிவு செய்துள்ளார்.

அதன் பிறகு தனது தந்தையின் அறிவுரைப்படி சாக்லேட்டை ஒரு பாதுகாப்பான பெட்டியில் போட்டு பல ஆண்டுகளுக்கு பாதுகாத்து வந்துள்ளார். திட்டத்தட்ட தனக்கு 90 வயது ஆகும் வரை அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்த சாக்லேட் அந்த பெட்டியிலேயே இருந்துள்ளது. அந்த சாக்லேட்டை கண்டறிய அவர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த பெட்டியை எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிட்டார். கடந்த வருடம் தனது 95வது வயதில் வேறா காலமானார்.

அவரின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என அனைவரும் அவரது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் அந்த பெட்டியை கண்டு எடுத்துள்ளனர். வேறாவின் நான்கு குழந்தைகளின் ஒருவரான நாடின் மெக்காஃபர்டி என்பவருக்கு தற்போது 71 வயதாகிறது. அவர்தான் அந்த சாக்லேட்டை பற்றிய ரகசியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து உள்ளார்.

அதாவது தனது தாய்க்கு இந்த சாக்லேட்டை பற்றிய ஞாபகம் வந்ததும் பிள்ளைகள் அனைவரையும் வீடு முழுவதும் தேட சொன்னாராம். ஆனால் எவ்வளவு தேடியும் சாக்லேட் கிடைக்கவில்லை என்பதால் வேறா சற்று வருத்தம் அடைந்ததாகவே அவரின் மகள் குறிப்பிட்டுள்ளார். 88 ஆண்டுகளுக்கு முன்பு பெட்டியில் போட்டு வைக்கப்பட்ட சாக்லெட்டை கண்டுபிடித்ததில் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் யாரேனும் அந்த பெட்டியை தவறுதலாக வெளியே தூக்கி எறிந்து இருக்கலாம் என்று அவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் 88 ஆண்டுகள் கழித்து தற்போது கிடைத்துள்ள இந்த சாக்லேட்டை பார்ப்பதற்கு தனது தாய் உயிரோடு இல்லை என்பதை நினைத்து அவர் வருத்தமடைந்துள்ளார். அவரின் குடும்பத்தார் தற்போது அந்த சாக்லேட்டை ஏலம் விட முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.