ஆசிரியரை சுட்ட 6 வயது பள்ளி மாணவன்.. அமெரிக்காவில் பரபரப்பு!

 

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர் மீது 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிச்நெக் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இந்த பள்ளியில் பயிலும் 6 வயது மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் வைத்து 30 வயதான ஆசிரியை ஒருவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அந்த ஆசிரியை பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததனர். அங்கு அவருக்கு உயிர் காக்கும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, அந்த மாணவனை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு அறைக்குள் நடந்த வாக்குவாதத்தையடுத்து, மாணவன் ஆசிரியையை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என உறுதிபடுத்தியுள்ள போலீசார், தற்போது அந்த ஆசிரியையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் எதிரொலியாக, வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தலைவர் ஸ்டீவ் ட்ரூ கூறுகையில், “இந்த துப்பாகிச்சூடு சம்பவம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 6 வயதுதான் ஆகிறது. அவன் வகுப்பறையில் திடீரென்று துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான். இதில் அவனது ஆசிரியர் காயமடைந்தார். 30 வயதான அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனிடம் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் உட்டா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.