5 மில்லியன் டாலர் மாளிகை.. அமெரிக்காவில் இறந்து கிடந்த இந்திய குடும்பம்.. போலீசார் விசாரணை!

 

அமெரிக்காவில் மாளிகை போன்ற வீட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பணக்கார தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வந்த பணக்கார இந்திய வம்சாவளி தம்பதியினரும், அவர்களது டீனேஜ் மகளும் அவர்களது வீட்டில் சடலமாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான அந்த மாளிகை மதிப்பு 5 மில்லியன் டாலர், அதாவது 41 கோடி ரூபாய் மதிப்புடையது ஆகும். அந்த மாளிகையில் தான் அவர்கள் உயிரிழந்த சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர்கள் ராகேஷ் கமல் (57), அவரது மனைவி டீனா (54) மற்றும் அவர்களது மகள் அரியானா (18) என அடையாளம் காணப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு, 7.30 மணியளவில் அவர்கள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மாசசூசெட்ஸின் தலைநகரான பாஸ்டன் நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோவர் நகரில் இவர்கள் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.

டீனாவும் அவரது கணவரும் எடுநோவா என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தனர். அந்த கல்வி நிறுவனம் இப்போது திவால் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது. குடும்ப வன்முறை காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பேரும் எப்படி உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் பகிர்ந்து கொள்ளவில்லை.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை முடிவு செய்யச் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் சமீபத்திய ஆண்டுகளில் அந்த தம்பதி பல்வேறு நிதி சிக்கல்களை எதிர்கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சூழலில் தான் கடந்த 2 நாட்களாக அந்த தம்பதி யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. கால் செய்த போதும் யாரும் எடுக்கவில்லை என்பதால் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்கறிஞர் மோரிஸ்ஸி என்பவர் கூறுகையில், “போலீசார் சொல்வது போல குடும்ப வன்முறையாக இது இருக்க வாய்ப்புகள் குறைவு. இதற்கு முன்பு இங்கே சண்டை, அடிதடி என எந்தவொரு புகாரும் வந்ததே இல்லை. இங்கே குடும்ப வன்முறைக்கான அறிகுறி எதுவுமே இல்லை. விசாரணை மிகவும் ஆரம்பக் கட்டத்தில் இருந்தாலும், தற்போது கிடைத்துள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது யாரும் வெளியே இருந்து வந்து தாக்கியதாகத் தெரியவில்லை” என்றார்.

இந்த தகவல்களை வைத்துத் தான் அது குடும்ப வன்முறை அல்லது தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என்று சந்திக்கின்றனர். அவர்கள் குடும்பம் தங்கி இருந்த மாளிகை 11 பெட்ரூம்கள் உடன் 19 ஆயிரம் சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இவர்கள் இதை 4 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் நிதி சிக்கலில் தவித்து வந்த நிலையில், குடியிருந்த இந்த மாளிகை போன்ற வீட்டை 3 மில்லியன் டாலருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது.