பிரேசிலில் 4 மாதங்களில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல்.. 2 ஆயிரம் பேர் பலி!

 

பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் டெங்கு காய்ச்சல் அனைவரையும் பாதிக்கிறது. இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) கொசுக்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளும் தெரிவதில்லை. 

எனவே இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் ஆண்டுக்கு ஆண்டு அதன் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதன்படி தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. 

மேலும் அவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். எனவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.