பாகிஸ்தானில் 22 வயது மாணவனுக்கு மரண தண்டனை.. காரணம் என்ன?

 

பாகிஸ்தானில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய வீடியோக்களை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த 22 வயது கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இஸ்லாம் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தாலோ, அவமதித்தாலோ, மத நிந்தனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்தநிலையில் 22 வயதான மாணவர் முகமது நபி பற்றி இழிவான வார்த்தைகள் கொண்ட வீடியோக்களை உருவாக்கியுள்ளார். இதனை 17 வயதான மாணவன் பகிர்ந்துள்ளான். இதனையடுத்து இந்த மாணவர்களுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் (எஃப்ஐஏ) சைபர் கிரைம் பிரிவு புகார் அளித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் நீதிமன்றத்தில் கடந்த வாரம் இந்த வழக்கின் தீர்பு அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மாணவர்கள் இருவர் இஸ்லாமியர்களின் இறை தூதர் என நம்பப்படும் நபிகள் நாயகம் குறித்து இழிவான வார்த்தைகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்பியதாக வழக்கு நடந்துள்ளது. அந்த வழக்கில்தான் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நபிகள் நாயகம் மற்றும் அவரது மனைவி குறித்து வாட்ஸ்அப் மூலம் இழிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்பிய குற்றத்திற்காக 22 வயது மாணவர் ஒருவருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, அந்த 17 வயதான மாணவருக்கு அவர் சிறுவன் என்ற காரணத்தினால் தூக்கு தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரு மாணவர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடியபோது, குற்றஞ்சாட்டப்பட்ட இந்த இருவரும் தவறாக சித்திரிக்கப்பட்டு சிக்கவைத்திருப்பதாக கூறினர். மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவரின் தந்தை லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 80க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளும், 19 தேவாலயங்களும் வன்முறையால் சூரையாடப்பட்டன. இரண்டு கிறிஸ்துவ சகோதரர்கள் திருக்குறானை அவமதித்தாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.