13 மாத குழந்தை மீது தெரியாமல் காரை ஏற்றிய தாய்… அமெரிக்காவில் பகீர் சம்பவம்!

 

அமெரிக்காவில் தனது 13 மாத குழந்தை மீது தாய் தெரியாமல் காரை ஏற்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் காட்டன்வுட்டில் உள்ள வெஸ்டர்ன் டிரைவ் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஃப்ரியா தோன்பர்க். இவர் கடந்த வியாழன் அன்று தனது வீட்டில் தனது காரை சரிபார்த்துக் கொண்டிருந்தார். தோன்பர்க் இல்லத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடம் மிக குறுகலாக காணப்பட்டுள்ளது.

இதையடுத்து காரை அவர் பார்க்கிங் செய்தபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்றுள்ளது. இதில் பின்னால் இருந்த அவரது குழந்தை சைரா ரோஸ் மீது ஏறியதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, 13 மாத குழந்தையான சைரா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசாரை தொடர்பு கொண்டு தோன்பர்க் விவரித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெரியாமல் காரை ஏற்றி குழந்தையின் உயிரை பறித்த நிலையில் தாயார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. 2022 மே 16-ம் தேதி பிறந்த இந்த குழந்தை கடந்த 6-ம் தேதி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.