படப்பையில் டாஸ்மாக் பார் அருகே இளைஞர் சரமாரி வெட்டிக்கொலை.. தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை!

 

படப்பையில் டாஸ்மாக் கடை அருகே பிளம்பர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (38). இவர் பிளம்பர், எலக்ட்ரிசீயன் உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் நேற்று முன்தினம் இரவு ஆரம்பாக்கம் டாஸ்மாக் கடை பகுதியின் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து ஆரம்பாக்கம் பகுதிக்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார், சம்பவ இடத்தில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்த சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் ஆரம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே ஏன் சென்றார்? செல்போன் மூலம் யாரேனும் அழைத்து சதி செய்து கொன்றனரா? என டாஸ்மார்க் கடை அருகே உள்ள முட்புதர் நிறைந்த இடத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது குறித்து மணிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சரவணனை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச்சென்ற மர்ம கும்பலை தனிப்படைகள் அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் படப்பை சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து டாஸ்மாக் கடைகளுக்கு வந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனையால் இங்கு தொடர்ந்து கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை தடுக்க வேண்டிய காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.