கிணற்றில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கண்டெடுப்பு.. சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்!
சிவகாசி அருகே திருமணமான முன்னாள் காதலியை தனியே அழைத்த இளைஞர், 3 சவரன் நகைக்காக அவரை அடித்து கொன்று, சடலத்தை கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன் (34). இவரது மனைவி ஷீலாராணி (25). அழகுக்கலை நிபுணர். கடந்த 4-ம் தேதி சிவகாசி - திருத்தங்கல் ரோட்டில் சத்யாநகருக்கு இருசக்கர வாகனத்தில் தன் கணவருடன் சென்று ஒரு இடத்தில் ஷீலாராணி இறங்கி சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சுசீந்திரன் தன் மனைவிக்கு போன் செய்த போது, செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் இறக்கி விட்ட சத்யாநகர் பகுதியில் தனது மனைவியை தேடினார். அவரை பற்றிய தகவல் கிடைக்காததால் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் சிவகாசி துணை சூப்பிரண்டு தனஞ்செயன் தனிப்படை அமைத்து ரகசியமாக தேடி வந்தார். இந்த நிலையில் ஷீலாராணியின் செல்போனுக்கு வந்த தொலைபேசி எண்களை கொண்டு அவர் யார் யாரிடம் பேசினார்? என்ற விவரத்தை சரி பார்த்த போது உணவு சப்ளை செய்யும் வாலிபர் ஒருவரிடம் அவர் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அந்த வாலிபரின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்த போலீசார் நேற்று மாலை அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்த போது ஷீலாராணியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து விருதுநகர் ரோட்டில் உள்ள கிணற்றில் உடலை வீசிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபர் கூறிய கிணற்றுக்கு சென்ற போது, அங்கு அழுகி உருக்குலைந்த நிலையில் பெண் உடல் மிதந்தது. அதனை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷீலாராணி கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷீலாராணியை, அந்த வாலிபர் எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.