காவல் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிப்பு.. மருந்துவமனையில் அனுமதி.. ஈரோட்டில் பரபரப்பு!

 

கோபி காவல் நிலையம் முன்பாக நர்ஸ் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளைம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஜெயசுதா (24). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஜெயசுதா சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வாணிப்புத்தூரை சேர்ந்த வசந்த் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று மாலை கோபி காவல் நிலையம் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறி அது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

அதற்கு அங்கிருந்த போலீசார் அவரிடம், இதுசம்பந்தமாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரே சம்பவத்தை மற்றொரு வழக்காக பதிவு செய்ய இயலாது என கூறியுள்ளனர். அதனால் ஏமாற்றம் அடைந்த ஜெயசுதா, அதனை ஏற்க மறுத்து, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து அதிலிருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றார். 

உடனே அங்கிருந்த போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து கோபி போலீசார் நர்சு ஜெயசுதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.