காப்புகாட்டில் எரிந்த நிலையில் பெண் சடலம்... சிக்கய கள்ளக்காதல் ஜோடி.. திருவண்ணமாலையில் அதிர்ச்சி சம்பவம்!!

 

திருவண்ணாமலை அருகே 65 வயது பெண்ணை கள்ளக்காதல் ஜோடி தீவைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமடை காப்புக்காடு வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

காப்புக்காடு வனத்துக்குள் பெண் எதற்கு வந்தார் அவரை கொலை செய்தது யார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் காப்புகாட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் திருவண்ணாமலையை சேர்ந்த விஜயா (65) என்பது தெரியவந்தது. விஜயாவை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

இந்த நிலையில் அவரது வீட்டில் குடியிருக்கும் காஞ்சனா, ஞானவேல் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. காஞ்சனாவுக்கு கணவர் இல்லை. இவர் கடந்த 3 வருடங்களாக விஜயா வீட்டில் குடியிருந்து வருகிறார். காஞ்சனாவுக்கும் ஞானவேலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. காஞ்சனா கடந்த 6 மாதமாக வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் விஜயா வாடகையை கேட்டு கறாராக பேசியுள்ளார்.

இந்நிலையில்தான் விஜயாவை கொலை செய்தால் வாடகை தொல்லையில் இருந்து விடுபடலாம் மேலும் அவரிடம் இருக்கும் சுமார் 100 சவரன் நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். விஜயாவின் தலையில் பலமாக தாக்கி படுகொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட விஜயாவின் உடலை ஞானவேலுக்கு சொந்தமான ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு பகுதியில் உள்ள காப்புகாட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். விஜயாவின் உடலை உட்கார வைத்து உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்க நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்து வாடகை தொல்லையிலிருந்து விடுபட 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை கொலை செய்து தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.