கணவனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவி.. திண்டுக்கலில் அதிர்ச்சி சம்பவம்!

 

கீரனூர் அருகே கணவரை மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வடபருத்தியூர் வசித்து வந்தவர் விவசாயி நாட்டுத்துரை (73). இவருக்கு கருப்பாத்தாள் (60) என்ற மனைவியும், கார்த்திகா (17) என்ற மகளும் உள்ளனர். மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் நாட்டுத்துரை கருப்பாத்தாளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரே வீட்டிலேயே இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்த நாட்டுத்துரை கருப்பாத்தாளிடம் தகராறு செய்தார். அப்போது மகள் கார்த்திகா, இருவரையும் விலக்கிவிட்டார். ஆனாலும் நாட்டுத்துரை தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பாத்தாள் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவன் என்றும் பாராமல் நாட்டுத்துரையை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த நாட்டுத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே சத்தம் கேட்டு நாட்டுத்துரையின் வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் அவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொலை சம்பவம் குறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நாட்டுத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினையில் கருப்பாத்தாள், நாட்டுத்துரையை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கருப்பாத்தாளை கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். கணவரை மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.