திருமணமான 2 மாதத்தில் மனைவி 4 மாதம் கர்ப்பம்.. ஆத்திரத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்..!

 

சிதம்பரம் அருகே மனைவி கர்ப்பமானதில் சந்தேகமடைந்த கணவன், பிளேடால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சிலம்பரசன் (29). இவருக்கும் சீர்காழி அடுத்த அரசூரை சேர்ந்த எம்.காம் பட்டதாரியான ரோஜா (25) என்பவருக்கும் கடந்த மே மாதம் 4-ம் தேதி சிதம்பரத்தில் திருமணம் நடைபெற்றது. சிலம்பரசன் திருமணத்துக்கு முன்பு துபாயில் 3 ஆண்டுகளாக ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு ரோஜா வீட்டில் இருந்தார். அப்போது, அவருக்கும் சிலம்பரசனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரம் அடைந்த சிலம்பரசன், தனது கையில் இருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரோஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதன் பின்னர், அவர் கிள்ளை போலீசில் நடந்த சம்பவம் குறித்து தொிவித்து சரண் அடைந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து அவர்கள், ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிலம்பரசனிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.