2-வது திருமணத்திற்கு வற்புறுத்திய வாலிபர்.. நர்ஸ் கிணற்றில் குதித்து தற்கொலை!

 

தர்மபுரி அருகே 2-வது திருமணத்திற்கு வற்புறுத்தியதால் நர்ஸ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மது பிரியா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபிரியா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்து ஆலங்காயம் காமராஜர் நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மதுபிரியா நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் நிம்மியம்பட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அதேப் பகுதியை சேர்ந்த சரத்குமார் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சம்பவத்தன்று சரத்குமார் மது பிரியாவை வற்புறுத்தி அருகே உள்ள மராட்டிபாளையம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அந்தப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, சரத்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மதுபிரியாவை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான மது பிரியா திடீரென ஓடிச்சென்று அருகில் இருந்த கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் அவரை காப்பாற்றாமல் சரத்குமார் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. மது பிரியாவுக்கு திருமணம் ஆகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பின்னர், போலீசார் வழக்குப் பதிவு செய்து, நர்ஸ் தற்கொலைக்கு காரணமாக இருந்த சரத்குமாரை கைது செய்தனர்.