பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. நெல்லையில் மீண்டும் நிகழ்ந்த கொடூரம்!

 

நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குளித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இரண்டு இளைஞர்களையும் கொடூரமாக தாக்கி அவர்களிடம் இருந்த செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளது. மேலும் கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல் இளைஞரக்ளிடம் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கேட்டுள்ளனர். 

பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்ததும் அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மாலை முதல் இரவு வரை சித்ரவைதை செய்த அந்த கும்பல், இளைஞர்களிடம் இருந்து 5 ஆயிரம் பணம், செல்போன், வெள்ளி சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களையும் மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 இளைஞர்களும் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் தாழையூத்து கிராமத்தை சேர்ந்த பொன்னுமனி என்பவர் தான் தனது நணபர்களுடன் சேர்ந்து பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை சித்ரவதை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பொன்னுமனி மற்றும் அவரது நண்பர்களான நல்லமுத்து, ராமர், சிவா, லட்சுமணன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், வழிப்பறி, ஆயுதங்களால் தாக்கி கொள்ளையடித்தல், அவமானப்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் சாதிய ரீதியில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு நடைபெற்ற கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.