மூதாட்டிக்கு இளைஞரால் வன்கொடுமை.. ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி!

 

புதுச்சேரியில் 63 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (25) என்பவர், மூதாட்டியை கடுமையாக தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு கொடூரமாக பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மூதாட்டி பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிலம்பரசனை கைது செய்த பாகூர் போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சிலம்பரசுனுக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376(2)ன் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், மற்றும் பிரிவு 394ன் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 5,000 அபராதமும், மற்றும் பிரிவு 506(2) மற்றும் 324ன் கீழ் இரண்டு ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. அனைத்து தண்டனைகளும் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும்.

இந்த வழக்கில் புதுச்சேரி அரசு வழக்கறிஞரும் மற்றும் இந்திய அரசின் அமலாக்கத்துறையின் வழக்கறிஞருமான விநாயகம் அரசு தரப்பில் ஆஜரானார். 63 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 25 வயது வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.