உல்லாசத்துக்கு மறுப்பு தெரிவித்த புதுபெண்..  அடித்துக் கொலை செய்த காதல் கணவன்.. போதையில் வெறிச்செயல்

 

செஞ்சி அருகே உல்லாசத்திற்கு மறுத்த புதுப்பெண்ணை கணவனே அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சுகுமார் (28). தொழிலாளியான இவருக்கும், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அத்தியூர் கிராமத்தில் உள்ள கலந்தமேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் திவ்யா (20) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சுகுமாருக்கு திருமணத்திற்கு முன்பே மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இது புது வாழ்க்கையில் பல கனவுகளுடன் இருந்த புதுப்பெண் திவ்யாவுக்கு இடியாய் அமைந்தது. மன கவலையுடன் இருந்த திவ்யா தனது கணவருக்கு அவ்வப்போது அறிவுரை கூறி வந்துள்ளார். இருப்பினும் சுகுமார் தினசரி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையும் சுகுமார் வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவியை அவர் உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. ஆனால், சுகுமார் மதுபோதையில் இருந்ததால், திவ்யா அதற்கு மறுத்து அவரை தன் அருகில் நெருங்க விடாமல் தள்ளி விட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் அருகில் கிடந்த இரும்புக்கம்பியால் திவ்யாவின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, சுகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார், திவ்யாவின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுமாரை கைது செய்தனர்.