சிதறி கிடந்த ஊசி, கத்தி.. சென்னை பெண் மருத்துவர் மர்ம மரணம்.. கர்நாடகாவில் பரபரப்பு!

 

கர்நாடகாவில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சென்னையை சேர்ந்தவர் சிந்துஜா (28). எம்பிபிஎஸ் முடித்த பின், மருத்துவ முதுகலை பட்டப்பிடிப்பைப் படித்த இவர், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், கொள்ளேகால் அரசு மருத்துவமனையில், மயக்க மருந்துப்பிரிவில் பணியாற்றி வந்தார். பணி நிமித்தமாக சிந்துஜா, கொள்ளேகால் நகரின் மகேஸ்வரா அரசு பி.யு.சி. கல்லுாரி அருகில், வாடகை வீட்டில் ஓராண்டாக வசித்து வந்தார். 

தன்னுடன் பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு பிடித்தமானவராக இருந்த அவருக்கு, நடப்பாண்டு ஜனவரியில், சென்னையைச் சேர்ந்த இளைஞருடன், இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல், காலையில் பணிக்கு வரும் இவர், நேற்று வரவில்லை. இதனால் டாக்டர் லோகேஸ்வரி, சிந்துஜாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். அவர் எடுக்கவே இல்லை. 

இதனால் சந்தேகமடைந்த டாக்டர், ஊழியர்களுடன் சிந்துஜா வீட்டுக்குச் சென்றார். கதவை தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, அவர் தரையில் விழுந்து கிடப்பது தெரிந்தது. பக்கத்தில் சிரிஞ்சு, மருந்து, கத்தி உட்பட சில பொருட்கள் கிடந்தன. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அவர் இறந்திருந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சிந்துஜாவின் இறப்புக்கு காரணம் தெரியவில்லை. சென்னையில் வசிக்கும் சிந்துஜாவின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து முறைப்படி புகார் அளித்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.