வீடு திரும்பிய கணவனுக்கு ஷாக் கொடுத்த காதல் மனைவி.. 21 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

 

கோவை அருகே, தகாத உறவில் இருந்த மனைவியை, கணவன் சமையல் கத்தியால் உடல் முழுவதும் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு நிவேதா (24) என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் நிவேதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் கணேசனுக்கு தெரிய வந்தது. இதனால் கணவர் கணேசன் நிவேதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நிவேதா கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காமல் தொடர்ந்து முருகனுடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று மாலை பணி முடித்து கணேசன் வீடு திரும்பியபோது, நிவேதாவுடன் முருகன் தனிமையில் இருந்ததாகவும், கணேசனைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த கணேசன், நிவேதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு கணேசன் தனது காதல் மனைவியை உடல் முழுவதும் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதையடுத்து நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது நிவேதா உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார், நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய நிவேதாவின் கணவர் கணேசனை தேடி வருகின்றனர். திருமணம் கடந்த உறவால் காதல் மனைவியை கணவனே வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.