சென்னையில் பயங்கரம்... மதுபோதையில் மனைவியை அடித்தே கொன்ற கணவன் கைது.!

 

சென்னை அருகே குடிபோதையில் மனைவியை கணவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார் (37). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி (35). இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லை. பிரேம்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிரேம்குமார் வழக்கம்போல் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதுகுறித்து கோமதி புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிரேம்குமார் அழைத்து விசாரணை செய்தபோது இருவரும் சமரசமாக போவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் பிரேம்குமாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு சென்ற பிரேம்குமார் கோமதியிடம் சண்டை போட்டு கன்னத்தில் அடித்து கிழே தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து மயங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கோமதியின் தாயார், மகள் மயங்கி கிடப்பதை கண்டு அச்சமடைந்து அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு கோமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூளையில் ரத்தம் கட்டியுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து நேற்று கோமதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேம்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.