மதுவுக்கு அடிமையாகி தொல்லை கொடுத்த மகன்.. கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி கொன்ற தந்தை.. மதுரையில் பயங்கரம்..!

 

மேலூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனின் கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடியை சேர்ந்தவர் பெருமாள் (55). இவர் மகன் ராஜபிரபு (26).  மதுவுக்கு அடிமையான அவர், தினந்தோறும் மது குடித்துவிட்டு பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டு பெற்றோருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வெளியே சென்ற ராஜபிரபு வீடு திரும்பவில்லை.

நேற்று காலையில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு கிணற்றில் ராஜபிரபு பிணமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி தமிழனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மேலூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு படையினரின் உதவியுடன் ராஜபிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். 

விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. மது போதைக்கு அடிமையான ராஜபிரபுவின் தொல்லை தாங்காமல் மனம் வெறுப்படைந்த அவருடைய தந்தை பெருமாளும், உறவினர் தங்கம் என்ற பொன்னையனும் (32) சேர்ந்து மது போதையில் இருந்த ராஜபிரபுவை நேற்று முன்தினம் இரவு கயிற்றால் கை, கால்களை கட்டி கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து பெருமாள், பொன்னையன் ஆகியோரை மேலூர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.