நான் பிறந்து இருக்கவே கூடாதுடா.. சாகும் முன் உருகி உருகி காதலன் வாட்ஸ் அப்பில் மெசேஜ்.. பர்கூர் அருகே சோகம்!!

 

பர்கூர் அருகே காதலிக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்துவிட்டு காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கொண்டப்ப நாயனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன் சசிகுமார் (23). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் உள்ள செல்போன் ஷோரூம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருடன் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் என்பவரின் மகள் ஜோன் சில்வியா என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.

அவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் அவர்கள் காதலிப்பது வீட்டிற்கு தெரியவரவே இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சசிகுமாரின் தந்தை மற்றும் தாயார் பெண் வீட்டாரிடம் பேசி சம்மதம் வாங்கி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல சசிகுமார் செல்போன் கடைக்கு பணிக்காக சென்று இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர் மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால் அவரது பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறிய பெற்றோர் உடனடியாக இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவங்கினர்.

முதற்கட்ட விசாரணையாக சசிகுமாரின் செல்போனை ஆய்வு செய்தபோது அவரது காதலியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், “தான் ஊருக்கு வந்து விட்டதாகவும், தன்னால் அவர் கஷ்டப்பட்டது போதும் எனவும், இனி அவர் கஷ்டப்பட வேண்டாம் எனவும், தான் பிறந்திருக்கக் கூடாது எனவும், அதனால் தான் இறந்து போய் விடுவதாகவும், இனி அவர் சந்தோஷமாக இருக்குமாறும்” அனுப்பி வைத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் காதலியின் தாயார் செல்போனுக்கும் மூன்று முறைக்கு மேல் பேசி உள்ளார். அதன் பின்னர் தான் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. அதனால் சசிகுமாரின் பெற்றோர் மற்றும் சகோதரிகள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலியின் வீட்டிற்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் சகோதரர் பூர்த்தி செய்து வந்ததாகவும் ஆனால் தங்கள் சகோதரரின் இறப்பிற்கு கூட காதலியும் அவரது வீட்டாரும் வரவில்லை எனவும் அதனால் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். காதலிக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.