அதிர்ச்சி! கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த அண்ணி.. குரை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை பலி..!

 

வண்ணாரப்பேட்டையில் கர்ப்பிணி பெண் வயிற்றில் எட்டி உதைத்ததால் பச்சிளம் குழந்தை பிறந்து சில நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அவதார ராமசாமி தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன். இவரது மனைவி கௌசல்யா(32), தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனிடையே, கௌசல்யாவின் அண்ணன் விஜயசிம்மன் அவரது மனைவி துர்காபாய் (36) ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி கௌசல்யா வீட்டிற்கு 2 பேருடன் சென்ற துர்காபாய் அவரிடம், “இந்த பிரச்சனைக்கு காரணம் நீ தான்” என்று கூறி அவரை அடித்து வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த கௌசல்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கௌசல்யாவை மீட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் கௌசல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி கௌசல்யா, இதுகுறித்து கடந்த மாதம் 29-ம் தேதி கவுசல்யா தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில், “என்னுடைய குழந்தை இறந்ததற்கு காரணம் துர்காபாய் தான்” என்று புகாரளித்தார். 

அதன்படி புகரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை  நடத்தியதில் அந்த சம்பவம் நடந்தது உண்மை என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து துர்காபாயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான பப்லு, குஷிதா பானு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.