மனைவியை கொன்று நாடகமாடிய மதபோதகர் கைது.. செங்கல்பட்டு அருகே பயங்கரம்

 

செங்கல்பட்டு அருகே மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கழுத்தை நெரித்து மதபோதகர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் அடுத்த பொன்மார் ஒட்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விமல் ராஜ் (35). இவர் பொன்மாரில் உள்ள தேவாலயம் ஒன்றில் மதபோதகராக உள்ளார். 2020-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்பவரை விமல் ராஜ் திருமணம் செய்தார். இருவரும் பொன்மாரில் மலை தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு சாரா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. விமல்ராஜ், மனைவி வைசாலி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வைசாலியை, விமல் ராஜ் அடித்து உதைத்ததுடன் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார். மனைவி வீட்டாருக்கு சந்தேகம் வராமல் இருக்க மூச்சுத்திணறி வைசாலி இறந்ததாக தெரிவித்தார். பின்னர் மனைவியின் உடலை ஒட்டியம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கான சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தார். மேலும் வைசாலியின் உறவினர்கள் மும்பையில் இருந்து வருவதற்காக அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் நேற்று மதியம் ஒட்டியம்பாக்கத்திற்கு வந்த வைசாலியின் உறவினர்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வைசாலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் நடத்திய விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை விமல் ராஜ் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.