பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி தற்கொலை.. ஓராண்டுக்குள் முடிவுக்கு வந்த சோகம்!!

 

பண்ருட்டி அருகே நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்து உள்ள மாளிகம்பட்டு தெற்கு தெருவில் வசித்து வருபவர் முத்து (27). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகள் செல்வகுமாரியை (21) காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் கடந்த ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தற்போது செல்வகுமாரி 9 மாத கர்ப்பணியாக இருந்தார். அடுத்த வராம் பெற்றோர் சமாதானமாகி வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் செல்வகுமாரிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செல்வகுமாரி மருத்துவரிடம் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் வீட்டில் இருந்த செல்வகுமாரி துாக்குபோட்டு கொண்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெண்ணின் தந்தை குருசாமி, காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி ஓராண்டே ஆவதால் செல்குமாரியின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கடலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.