பேருந்து நிலையத்தில் ப்ளஸ்-2 மாணவன் கத்தியால் குத்தி படுகொலை.. ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு!

 

ஸ்ரீமுஷ்ணம் அருகே பேருந்துக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (17). இவர், விருத்தாச்சலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மின்வாரியத்தில் பணிபுரியும் ஆனந்த் என்பவருக்கும் ஜீவாவுக்கும் இடையே சமீபகாலமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனை முன்வைத்து அவ்வப்போது இருவரும் சண்டை போட்டுள்ளனர், அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதனம் செய்து வைத்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல பேருந்துக்காக மேல் புளியங்குடி கிராமத்திலுள்ள பேருந்து நிலையத்தில் இன்று காலை ஜீவா காத்திருந்தார். அப்போது, பேருந்து நிலையத்திற்குச் சென்ற ஆனந்த், ஜீவாவுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே சண்டை பெரிதாகி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவா உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். அருகில் உள்ள வாய்க்காலில் ஜீவாவை தள்ளிவிட்டு அங்கிருந்து ஆனந்த் தப்பினார். இந்த கொடூர சம்பவத்தில் மாணவன் ஜீவா, வயிற்றில் இருந்து குடல் வெளியேறி சம்பவ இடத்திலேயே பரிதாபாமாக உயிரிழந்தார். ஜீவா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த குடும்பத்தினரும், உறவினர்களும் அங்கு ஓடி வந்து கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய ஆனந்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஜீவாவுக்கு ஆனந்த் பாலியல் ரீதியாக அடிக்கடி தொல்லை தந்ததாகவும், இதனை முன்வைத்து ஏற்பட்ட பிரச்னையில்தான் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி சென்ற 12-ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் விருத்தாச்சலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.