தாய் கண்டித்ததால் ப்ளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

 

சென்னை பல்லாவரத்தில், வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால், 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் மாரியம்மாளின் கடைசி மகன் ஜெகதீஷ். இவர் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலை ஜெகதீஷின் தாயார் மாரியம்மாள், வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடித்து வைக்காததால் ஜெகதீஷை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெகதீஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

உடற்பயிற்சி முடித்து வீடு திரும்பி அண்ணன் ஜானர்த்தனன், தூக்கில் தொங்கி கொண்டிருந்த தம்பியை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜெகதீஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் திட்டியதால் அவமானம் தாங்கமுடியாமல் மாணவன் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.